Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜூலை (ஹி.ச.)
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ₹100 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி அரசகுமார் மீது சென்னை காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.
போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி,
சென்னை சாலிகிராமத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்படாத அமைப்பை நடத்தி வந்ததாக கூறப்படும் அரசகுமார், திமுகவின் செய்தித் தொடர்புக் குழு துணைத் தலைவராக இருந்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தர உயர்வு, டிடிசிபி (DTCP), சிஎம்டிஏ (CMDA) அனுமதிகள் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து ₹100 கோடிக்கும் மேல் பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறையினர் அரசகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை 59 தனியார் பள்ளி நிர்வாகங்கள் புகார் அளித்துள்ளதாகவும், மேலும் பலர் புகார் அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வழக்கின் தீவிரத்தையும், பொதுமக்களின் நலன் மற்றும் சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டும், அரசகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்
(Goondas Act) கீழ் சென்னை காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் அவர் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட உள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ