ராயலசீமாவில் ரூ.3,100 கோடி முதலீட்டில் தால்மியா சிமெண்டு ஆலை விரிவாக்கம் - 700 பேருக்கு வேலைவாய்ப்பு
கடப்பா , 14 ஜூலை (ஹி.ச.) ஆந்திர மாநிலம் ராயலசீமா பகுதியில் தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில், கடப்பா மாவட்டத்தில் உள்ள தால்மியா பாரத் சிமெண்டு ஆலையின் 2-வது கட்ட விரிவாக்கப் பணிகள் தொடங்க உள்ளன. ஜம்மலமடுகு தொகுதிக்குட்பட்ட மைலவ
A


கடப்பா , 14 ஜூலை (ஹி.ச.)

ஆந்திர மாநிலம் ராயலசீமா பகுதியில் தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில், கடப்பா மாவட்டத்தில் உள்ள தால்மியா பாரத் சிமெண்டு ஆலையின் 2-வது கட்ட விரிவாக்கப் பணிகள் தொடங்க உள்ளன.

ஜம்மலமடுகு தொகுதிக்குட்பட்ட மைலவரம் மண்டலம் சின்னகொமேர்லா பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு அமைச்சர் நாரா லோகேஷ் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

ரூ.3,100 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம் ஆலையின் உற்பத்தி திறன் கணிசமாக அதிகரிக்க உள்ளது.

தற்போது ஆண்டுக்கு 25 லட்சம் டன் கிளிங்கர் மற்றும் 36 லட்சம் டன் சிமெண்டு உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், விரிவாக்கம் முடிந்த பிறகு கிளிங்கர் உற்பத்தி திறன் 61 லட்சம் டன்னாகவும், சிமெண்டு உற்பத்தி திறன் 96 லட்சம் டன்னாகவும் உயரும்.

இந்த திட்டத்தின் மூலம் புதிதாக 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தற்போது இந்த ஆலையின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 950 பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

விரிவாக்கத்துக்குப் பிறகு மொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை 1,650 ஆக உயரும். இதன் மூலம் போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட சார்பு தொழில்களிலும் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தால்மியா சிமெண்டு நிறுவனம் தற்போது வரி மற்றும் சுரங்க ராயல்டி மூலம் ஆந்திர அரசுக்கு ஆண்டுக்கு ரூ.102 கோடி வருவாய் அளித்து வருகிறது. புதிய விரிவாக்கம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு அரசின் வருவாய் ரூ.325 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த புதிய ஆலை நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட உள்ளது.

ஆலையின் மின்சார தேவையில் 80 சதவீதம் சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறப்படும். மேலும், ஆலை வளாகத்தில் 33 சதவீதம் பசுமைப் பகுதி உருவாக்கப்படும்.

பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த ரூ.100 கோடி செலவில் 130 உயர் திறன் கொண்ட பேக் ஃபில்டர்கள் அமைக்கப்பட உள்ளன.

சிமெண்டு, சர்க்கரை மற்றும் மின்சாரத் துறைகளில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் தால்மியா பாரத் குழுமம், நாட்டின் முன்னணி சிமெண்டு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த புதிய முதலீடு ராயலசீமா பகுதியின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய முன்னேற்றமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA