Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஜூலை (ஹி.ச.)
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தாய்லாந்து நாட்டில் இருந்து பெருமளவில் போதைப்பொருள் கடத்திக் கொண்டு வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில், சுங்கத்துறை அதிகாரிகள் தாய்லாந்தில் இருந்து சென்னை வரும் அனைத்து விமான பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து, தீவிர சோதனை செய்தனர்.
அந்த வகையில், இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரையும், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த விமானத்தில் வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 25 வயது பயணி ஒருவர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்று விட்டு, கோலாலம்பூர் வழியாக சென்னை வந்திருப்பது தெரியவந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரணை செய்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் மேலும் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரின் உடைமைகளை பிரித்து பார்த்து சோதனை செய்தனர்.
அப்போது அவரது உடைமையில் சுமார் 49 பிளாஸ்டிக் பார்சல்களில், போதைப்பொருட்களை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
அதனை பிரித்து பார்த்து சோதனை செய்த போது அது ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர்ரக கஞ்சா என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த இளைஞரிடம் இருந்து சுமார் 4 கிலோ 700 கிராம் மதிப்பிலான ஹைட்ரோபோனி கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அதன் சர்வதேச மதிப்பு 4 கோடியே 70 லட்சம் என தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, அந்தப் பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், விசாரணை நடத்தியதில் இளைஞர் படித்த பட்டதாரி என்பதும், வேலை எதுவும் இல்லாததால் பணத்திற்காக கடத்தல் கும்பலுக்கு குருவியாக செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.
இவரை கஞ்சா கடத்தி வர பயன்படுத்திய கும்பல் யார்? இதன் பின்னணியில் சர்வதேச போதை போல் கடத்தல் கும்பல் இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN