Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 14 ஜூலை (ஹி.ச.)
கடலூரில் பெண் ஒருவரை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகுரு மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
புகாரில், வழக்கறிஞர் சிவகுரு அந்தப் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து, அதை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பலமுறை பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், பணம் கொடுக்க மறுத்தபோது அப்பெண்ணின் மகனை சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகார் அளிக்கப்பட்டதை அறிந்ததும் வழக்கறிஞர் சிவகுரு தலைமறைவாகிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்த சிவகுரு மீதான இந்தப் புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கட்சி தலைமை இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. கைது நடவடிக்கைக்குப் பின்னரே மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குழந்தைக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் கவுன்சிலிங் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b