Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 14 ஜூலை (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள மங்களூர்
அரசு மேல்நிலைப்பள்ளியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் இருந்த மரம் ஒன்றில் தேனீக்கள் கூடு கட்டியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களை திடீரென தேனீக்கள் தாக்கியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொட்டப்பட்டு பாதிக்கப்பட்டனர். இதனால் அச்சமடைந்த மாணவர்கள் பலர் பள்ளியை விட்டு வீடுகளுக்குத் திரும்பினர்.
தேனீக்கள் தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மருத்துவமனையில் திரண்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இடப்பற்றாக்குறை காரணமாக சில மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறையினரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P