Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 ஜூலை (ஹி.ச.)
சென்னை மாநிலக் கல்லூரி அரங்கில் இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார்.
மேலும், ₹139.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனை கட்டிடங்கள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை காணொலி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டையும் தொடங்கி வைக்க உள்ளார்.
அத்துடன், தமிழக அரசு மருத்துவச் சேவைகளை டிஜிட்டல் முறையில் பொதுமக்களுக்கு எளிதாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உருவாக்கியுள்ள நலம் TN செயலியையும் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த செயலி மூலம் பொதுமக்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவர்களின் பணி நேரம், கிடைக்கும் மருத்துவச் சேவைகள் உள்ளிட்ட தகவல்களை எளிதாக அறிந்து கொள்ள முடியும். மேலும், தனிநபர் மருத்துவப் பதிவுகளை (Health Records) டிஜிட்டல் வடிவில் சேமித்து பயன்படுத்தும் வசதியும் இடம்பெற்றுள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதாரத் தகவல்கள், தடுப்பூசி நினைவூட்டல்கள் உள்ளிட்ட சேவைகளும் இந்த செயலியில் வழங்கப்பட உள்ளன.
அரசு மருத்துவச் சேவைகளை விரைவாகவும், வெளிப்படையாகவும் பொதுமக்கள் அணுகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நலம் TN செயலி, தமிழகத்தின் டிஜிட்டல் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் புதிதாக பணிநியமனம் பெறும் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ