ஜூலை 16 ஆம் தேதி பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரை - பாதுகாப்பு ஒத்திகைகள் தீவிரம்
ஹி.ச, 14 ஜூலை (பூரி) ஒடிசா மாநிலத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரை, ஜூலை 16-ஆம் தேதி பகவான் ஜெகன்னாதர், பகவான் பலபத்ரா மற்றும் தேவி சுபத்ரா ஆகியோரின் தேரோட்டத்துடன் குண்டிச்சா கோவிலை நோக்கித் தொடங்குகிறது. ஒன்பது நாட்கள்
ஜூலை 16 ஆம் தேதி பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரை - பாதுகாப்பு ஒத்திகைகள் தீவிரம்


ஹி.ச, 14 ஜூலை (பூரி)

ஒடிசா மாநிலத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரை, ஜூலை 16-ஆம் தேதி பகவான் ஜெகன்னாதர், பகவான் பலபத்ரா மற்றும் தேவி சுபத்ரா ஆகியோரின் தேரோட்டத்துடன் குண்டிச்சா கோவிலை நோக்கித் தொடங்குகிறது.

ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழா, ஜூலை 24-ஆம் தேதி 'பஹுதா யாத்திரை' எனப்படும் திரும்பும் பயணத்துடன் நிறைவடைகிறது.

அதேவேளையில், தெய்வங்கள் ஜூலை 27-ஆம் தேதி மீண்டும் முக்கிய கோவிலுக்குள் எழுந்தருளத் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஜூலை 16-ஆம் தேதி தொடங்கவுள்ள வருடாந்திர பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரையை முன்னிட்டு, அவசரக்கால நடவடிக்கை, கூட்ட நெரிசல் மேலாண்மை மற்றும் பேரிடர் தயார்நிலை ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில், பூரியில் இன்று பல்வேறு அமைப்புகள் இணைந்து ஒரு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தின.

ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் போது அவசரச் சூழல்களைக் கையாள்வதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் தயார்நிலையைச் சோதிக்கும் வகையில், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), ஒடிசா தீயணைப்புத் துறை, சாரணர் மற்றும் வழிகாட்டி (Scouts and Guides) படை மற்றும் பிற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர்.

ரத யாத்திரையின் போது பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்களால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சாரணர் மற்றும் வழிகாட்டி படை தன்னார்வலர் ராஜ் பட்நாயக் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ரத யாத்திரையின் போது பகவான் ஜெகன்னாதருக்குச் சேவை செய்வதில் நான் ஈடுபட்டுள்ளேன். இம்முறை 10 முதல் 15 லட்சம் பேர் அல்லது அதற்கும் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்கள்) மருத்துவ வசதிகளை விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக 'பசுமை வழித்தடத்தை' (green corridor) உருவாக்க நாங்கள் உதவுகிறோம். மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசுடன் இணைந்து ரோவர்-ரேஞ்சர்கள் மற்றும் சாரணர்-வழிகாட்டி படையினர் பெரும் ஆதரவை வழங்குகின்றனர்.

அவசர ஊர்தி மருத்துவ மையத்தை விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்ய, நாங்கள் பெரும்பாலும் கூட்டத்திற்கு இடையே மென்மையாக முன்னேறிச் செல்ல வேண்டியுள்ளது.

இதற்கான தயாரிப்புப் பணிகளுக்கு எங்களுக்கு மூன்று நாட்கள் கிடைத்தன. நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம்.

ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த நோக்கத்திற்காக எங்கள் உயிரைத் தியாகம் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பல்வேறு அமைப்புகள் தங்கள் அவசரக்கால மீட்பு அமைப்புகள் மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மை உத்திகளை ஆய்வு செய்த நிலையில், இவ்விழாவிற்கான இறுதித் தயார்நிலை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கிடையில், மூன்று பிரம்மாண்டமான தேர்களை அமைப்பதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஜெகன்னாதர், பலபத்திரர் மற்றும் தேவி சுபத்ரா ஆகியோரின் தேர்களுக்கான எஞ்சிய கட்டமைப்பு மற்றும் அலங்காரப் பணிகளில் கைவினைஞர்களும் சேவகர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவிழா மரபின் ஒரு பகுதியாக, இந்த மூன்று தேர்களும் ஒவ்வொரு ஆண்டும் புதிதாகக் கட்டமைக்கப்படுகின்றன. தேர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள 'மஹாராணா' சேவகர்கள், நியமிக்கப்பட்ட சேவகர்களின் மேற்பார்வையில் பாரம்பரிய வழக்கங்கள் மற்றும் சடங்குகளின்படி இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b