Enter your Email Address to subscribe to our newsletters

கோவை , 14 ஜூலை (ஹி.ச.)
கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் கணினியியல் மற்றும் அது சார்ந்த பொறியியல் படிப்புகளுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள நூற்றாண்டு கலைவரங்கில் நடைபெற்றது.
விழாவில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், உயிரி மருத்துவப் பொறியியல் மற்றும் உயிர்த்தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 543 இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அந்தந்தத் துறைகளில் முதலிடம் பிடித்த மாணவர்களின் சிறந்த கல்விச் செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்குத் தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
விழாவில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநர் டாக்டர் கோவிந்தன் ரங்கராஜன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில்:
குவாண்டம் கணினியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் சைபர் பாதுகாப்பின் முக்கியத்துவம் மிக முக்கியமானது.
பட்டதாரிகள் பகுத்தறியும் சிந்தனையை கைவிடாமல், ஏஐ தொழில்நுட்பத்தில் திறமை பெற்றவர்களாக விளங்க வேண்டும்.
அதே வேளையில், ஒரு சிறந்த உலகை உருவாக்குவதற்காக உழைக்கும் அதே நேரத்தில், மனிதநேயத்தையும் மனித உறவுகளையும் பேணிக்காத்திட வேண்டும் என்று மாணவர்களை ஊக்குவித்தார்.
விழாவிற்குப் பிஎஸ்ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி. ஆர். தைய்லா வரவேற்புரையாற்றினார்.
முதல்வர் டாக்டர் பி. ஆர். தைய்லா பேசுகையில்,
கணினி அறிவியல் என்பது நவீன உலகின் டிஜிட்டல் முதுகெலும்பாக மாறியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் ஆகியவை தொழில்நுட்ப மாற்றத்தை துரிதப்படுத்துகின்றன.
மாணவர்கள் பல்முகத்துறை சிந்தனை, அறிவியல் துல்லியம் மற்றும் வலுவான அடிப்படைக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பிஎஸ்ஜியில் கற்ற திறன்களைக் கொண்டு தேசத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
விழாவில் முக்கியப் பிரமுகர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA