Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 14 ஜூலை (ஹி.ச)
ஈரோடு மாவட்டம் பவானி காளிங்கராயன் கால்வாய் பாசனப் பகுதிகளில் வாடும் பயிர்களைக் காப்பாற்ற, பவானிசாகர் அணையில் இருந்து 15 நாட்களுக்கு உயிர் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பவானிசாகர் அணைக்கு தற்போது போதுமான நீர்வரத்து இருப்பதால், காளிங்கராயன் கால்வாய் மூலம் பாசனம் பெறும் பகுதிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வலுத்துள்ளது.
கடந்த சில வாரங்களாக போதிய மழை இல்லாததால் மஞ்சள், கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து வரும் நிலையில், விவசாயிகள் கடும் கவலையில் ஆழ்ந்திருந்தனர்.
இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முதற்கட்டமாக 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஈரோடு, காளிங்கராயன் கால்வாய் வழித்தடத்தில் உள்ள சுமார் 15,700 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் மற்றும் நீர்வரத்தை கண்காணித்து, மேற்கொண்டு தேவைப்படும் பட்சத்தில் நீர் திறப்பை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறுகையில், 15 நாட்கள் மட்டும் போதாது. பயிர்கள் முழுமையாக அறுவடைக்கு வரும் வரை தொடர்ந்து தண்ணீர் வழங்கினால் மட்டுமே பெரும் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும்.
அணைக்கு நீர்வரத்து நன்றாக உள்ள இந்த சமயத்தை பயன்படுத்தி, பாசனத்துக்கு முறையாக தண்ணீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b