Enter your Email Address to subscribe to our newsletters

அரியலூர், 15 ஜூலை (ஹி.ச.)
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அங்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள தனது தந்தை தொல்காப்பியனின் நினைவு நாளையொட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவரது சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், தவெக அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடம் பெற வாய்ப்பு உள்ளது என தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டபோது,
அந்தக் கருத்தை நான் வரவேற்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான ஆபரேஷன் எல் தொடர்பாக, வரும் ஆகஸ்ட் 15-க்குள் அதிமுகவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களை தவெக தன் பக்கம் இழுக்கும் முயற்சி நடைபெறுவதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், இதுபோன்ற செயல்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து கண்டித்து வருவதாகவும் கூறினார்.
நாகர்கோவிலில் நடைபெற்றதாகக் கூறப்படும் சிறைச்சாலை மரணம் மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், சம்பவம் குறித்து முழுமையான, நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam