Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூலை (ஹி.ச.)
சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த முருகன் (45), நாய் கடித்தும் உரிய சிகிச்சை பெறாத நிலையில், 45 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான முருகனை, சுமார் 45 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் அருகே தெரு நாய் ஒன்று கடித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், அதற்கான மருத்துவ சிகிச்சை அல்லது தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல், அவர் வழக்கம்போல் இருந்து வந்ததாகவும், தொடர்ந்து மது அருந்தி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நேற்று இரவு முருகனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அவரது நடத்தையில் அசாதாரண மாற்றங்கள் காணப்பட்டதுடன், பின்னர் வாயில் நுரை தள்ளியதாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக உறவினர்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பு: நாய் கடித்தால் உடனடியாக காயத்தை சோப்பு மற்றும் ஓடும் நீரில் நன்றாகக் கழுவி, தாமதமின்றி அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று ரேபிஸ் தடுப்பூசி மற்றும் தேவையான சிகிச்சையைப் பெறுவது உயிரைக் காக்க மிகவும் அவசியம்.
Hindusthan Samachar / P YUVARAJ