Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூலை (ஹி.ச.)
அரசு அலுவலகங்களில் நிலவும் லஞ்சம், ஊழலை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
பொதுமக்களிடம் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக வரும் புகார்களை எளிதாகவும், விரைவாகவும் தெரிவிக்க ஏதுவாக பிரத்யேக வாட்ஸ்அப் எண் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்துள்ளது.
இதன்படி, எந்தவொரு அரசு அலுவலகத்திலும் பொதுமக்களிடம் யாராவது லஞ்சம் கேட்டாலோ அல்லது லஞ்சம் கொடுக்கும்படி நிர்பந்தித்தாலோ, அது குறித்த தகவலை 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகாராக தெரிவிக்கலாம்.
இந்த எண்ணிற்கு குரல் பதிவு, வீடியோ ஆதாரம், புகைப்படம் மற்றும் குறுந்தகவல் வாயிலாகவும் புகார்களை அனுப்பலாம்.
புகார் அளிப்பவர்களின் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும் என்றும், புகார்களின் அடிப்படையில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உறுதி அளித்துள்ளது.
ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்க பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தயக்கமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும் எனவும் அத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் இந்த லஞ்ச ஒழிப்பு புகார் எண்கள் அடங்கிய தகவல் பலகைகளை மக்கள் பார்வைக்குத் தெளிவாக வைக்கும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b