Enter your Email Address to subscribe to our newsletters

அகமதாபாத், 15 ஜூலை (ஹி.ச.)
கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியாவின் AI-171 விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 229 பயணிகள், 12 விமானப் பணியாளர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர்.
இந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இறுதி அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இன்று தெரிவித்தார்.
இந்த விசாரணையின் முன்னேற்றம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் சம்பந்தப்பட்ட விபத்து குறித்த விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது.
விசாரணையைக் கையாளும் அமைப்பான AAIB முழு திறன் கொண்டது, மேலும் முற்றிலும் வெளிப்படையான முறையில் விசாரணையை நடத்தி வருகிறது.
அறிக்கையை கூடிய விரைவில் வெளிக்கொண்டு வருவது முக்கியம் என்றாலும், விபத்து எப்படி, ஏன் நடந்தது என்பது குறித்த முழுமையான உண்மை வெளிச்சத்திற்கு வருவதுதான் மிக முக்கியம். விசாரணையின் இறுதி அறிக்கை மிக விரைவில் வெளியாகும்.
என்று அவர் உறுதியளித்தார்.
விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து கவலை தெரிவித்தும், தகவல் தொடர்பு இல்லாததை சுட்டிக்காட்டியும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இறுதி அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு AAIB சுயாதீனமான சிமுலேட்டர் சரிபார்ப்பு சோதனைகளை நடத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு 15 அல்லது 30 நாட்களுக்கும் தொடர்ந்து தகவல்களை வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தினர் அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இறுதி அறிக்கை வெளியீட்டிற்கான தெளிவான காலக்கெடுவை வழங்க வேண்டும் என்றும், போயிங் 787 ரக விமானம் மற்றும் விபத்து விசாரணையில் நிபுணத்துவம் பெற்ற அனுபவம் வாய்ந்த வணிக விமானி ஒருவரை விசாரணைக் குழுவில் சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
மேலும், மற்ற பொறுப்புடைய தரப்பினருக்கு எதிரான தங்கள் சட்ட உரிமைகளை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்திட குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b