Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூலை (ஹி.ச)
கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி, அவரது உயரிய இலட்சியங்களைப் பின்பற்றி சமத்துவமும் வளர்ச்சியும் நிறைந்த சமூகத்தை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில்,
கல்வியை அனைவருக்கும் எட்டும் வகையில் கொண்டு சென்ற காமராஜரின் தொலைநோக்குப் பார்வையையும், எளிமை, நேர்மை, மக்கள் நலன் ஆகியவற்றை வாழ்வின் அடையாளமாகக் கொண்ட அவரது உயர்ந்த பண்புகளையும் நன்றியுடன் நினைவுகூருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், காமராஜரின் சேவை மனப்பான்மையும், தன்னலமற்ற தலைமைத்துவமும் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கல்விக் கண் திறந்த தலைவர்” எனப் போற்றப்படும் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளில், அவரது உயரிய இலட்சியங்களையும், மக்கள் முன்னேற்றத்திற்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பையும் பின்பற்றி, சமத்துவமும் வளர்ச்சியும் நிறைந்த சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம்.
அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும் என நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ