Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூலை (ஹி.ச)
தமிழ்நாட்டில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்ற வாசகத்துடன் கூடிய அறிவிப்பு பலகைகளை கட்டாயமாக வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசு, ஊழல் மற்றும் லஞ்சமற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அண்மையில் முதலமைச்சர் ஜோசப் விஜய், அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால், என்னுடைய பெயரைச் சொல்லுங்கள்; லஞ்சம் கொடுக்க முடியாது என்று தெரிவியுங்கள் என பொதுமக்களிடம் வலியுறுத்தியிருந்தார்.
அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில், அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்கும் வகையில் பின்வரும் விவரங்களை முக்கிய இடத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது:
- WhatsApp: 9498180936
- மின்னஞ்சல்: dvac@nic.in
- தொலைபேசி: 044-22321090, 044-22321085, 044-22310989, 044-22342142
- முகவரி: இயக்குநர், லஞ்ச ஒழிப்புத் துறை, எண் 293, எம்.கே.என். சாலை, ஆலந்தூர், சென்னை – 600016
முன்னதாக இதுபோன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், பல அரசு அலுவலகங்களில் அறிவிப்பு பலகைகள் முறையாக வைக்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, இனி அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வையில் தெளிவாக தெரியும் வகையில் இந்த அறிவிப்பு பலகைகளை கட்டாயமாக அமைக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் சாய் குமார் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ