Enter your Email Address to subscribe to our newsletters

கோவை , 15 ஜூலை (ஹி.ச.)
உலக புகழ்பெற்ற நீலகிரி மலை ரெயிலுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டதன் 21-ம் ஆண்டு தொடக்க விழா மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி புறப்பட தயாராக இருந்த மலை ரெயிலில் பயணம் மேற்கொள்ள வந்த சுற்றுலா பயணிகளுக்கு ரெயில்வே அதிகாரிகள் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விழாவிற்கு நீலகிரி மலை ரெயில் உதவி இயக்குநர் திருமலையான் தலைமை தாங்கினார்.
இதில் ரெயில் நிலைய அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு போலீசார் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது, நீலகிரி மலை ரெயிலின் வரலாற்று சிறப்புகள், அதன் தனித்துவமான பல்சக்கர அமைப்பான ரேக் அண்ட் பினியன் சிஸ்டம் மற்றும் இந்த பாரம்பரிய சின்னத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பயணிகளுக்கு விளக்கப்பட்டது.
மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கைச் சூழலை பாதுகாக்கும் வகையில், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் நேற்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி நீலகிரி மலை ரெயில் தனது பாரம்பரிய பயணத்தை தொடங்கியது.
நீலகிரி மலை ரெயில், மலைப்பாதையில் இயங்கும் சிறப்பு ரெயிலாக விளங்கி வருகிறது.
அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் தனித்துவமான பொறியியல் அமைப்பை கருத்தில் கொண்டு, யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகாரம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA