Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஜூலை (ஹி.ச.)
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. விஜயபாஸ்கர், 1,05,773 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவர், தவெக வேட்பாளர் முருகேசனை 62,073 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த வெற்றியை எதிர்த்து, அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த கே.கே. செல்லப்பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தேர்தல் பிரச்சாரத்தின் போது சி. விஜயபாஸ்கர் வாக்காளர்களுக்கு ரூ.10,000 மற்றும் ரூ.2,000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கியதாகவும், பிரிட்ஜ் வாங்குவதற்கான கூப்பன்களையும் விநியோகித்து வாக்குகளை கவரும் வகையில் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனவே, அவரது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்.
மனுதாரர் முன்வைத்துள்ள தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டதாக குறிப்பிட்ட நீதிபதி, வழக்கு தொடர்பாக சி. விஜயபாஸ்கர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P