Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 16 ஜூலை (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வந்த வீராசாமி, மாம்பாக்கம் ஊராட்சியில் ₹9.80 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைத்த நவீன் (24) என்ற ஒப்பந்ததாரரிடம், நிலுவைத் தொகையை விடுவிக்க ₹1.30 லட்சம் லஞ்சம் கேட்டதாகப் புகார் எழுந்தது.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வீராசாமி லஞ்சப் பணத்தைப் பெற்றுத் தனது மனைவியிடம் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த வீராசாமி, இது லஞ்சப் பணம் அல்ல என்றும், தான் ஒப்பந்ததாரருக்குக் கொடுத்த கடனை அவர் திரும்பச் செலுத்தியதாகவும், த.வெ.க மற்றும் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆகியோரின் பெயரைக் கெடுக்க தி.மு.க-வினர் திட்டமிட்டுச் செய்த சதி என்றும் கூறினார்.
வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, த.வெ.க செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் சி.வி.தினகரன், வீராசாமியைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.
ஒப்பந்ததாரர் நவீன் அளித்த புகாரின் பேரில், தாழம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் வீராசாமியைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b