Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஜூலை (ஹி.ச.)
சென்னையில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி பகுதியில் நேற்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையின் போது விடுதி அறை ஒன்றில் கட்டு கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த அறையில் தங்கியிருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, இதன் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா, இந்த கள்ள நோட்டுகளை எங்கு புழக்கத்தில் விட திட்டமிட்டிருந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b