Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 17 ஜூலை (ஹி.ச.)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ஆந்திர மாநிலத்திலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, அதிகாரிகளை உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 20 நாட்களில் மட்டும் 13-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் கடப்பா மாவட்டத்தில் அதிகபட்சமாக 8 பேருக்கும், குண்டூர் மாவட்டத்தில் 3 பேருக்கும், விசாகப்பட்டினம் மற்றும் காக்கிநாடாவில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்கு மாநிலத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 3 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள நிலையில், 2 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்வதற்காக புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதையடுத்து, பரிசோதனை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்கவும், தேவையான மருத்துவ ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தனது அறிக்கையில் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் விரைவில் ஆய்வு நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA