Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் மாவட்ட நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதில் ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாகக் கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர் அணி நிர்வாகி எம். ஞானசௌந்தரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தவெக தலைவர் மற்றும் அமைச்சர்களின் பரிந்துரையின் பேரிலேயே இந்த நியமனங்கள் நடப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 100% நேர்மையாகவும், சட்டப்படியும், தற்காலிக அடிப்படையிலுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், இதில் லஞ்சம் பெறப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும் விளக்கமளித்தார்.
அரசு தலைமை வழக்கறிஞரின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மேலும் விசாரிக்க ஏதுமில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில் அரசியல் உள்நோக்கத்தோடு சேர்க்கப்பட்டதாகக் கருதப்பட்ட தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் (முதலமைச்சர்), பொதுச் செயலாளர் 'புஸ்ஸி' ஆனந்த் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோரின் பெயர்களை மனுவில் இருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
செய்திகளில் இடம்பிடிப்பதற்காகவே இவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
Hindusthan Samachar / vidya.b