Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 17 ஜூலை (ஹி.ச.)
தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மேகமலை அருவிக்கு விடுமுறை நாட்களில் தேனி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுதும் உள்ள ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து அருவியில் குளித்து மகிழ்வது வழக்கம்.
மேற்குத் தொடர்ச்சி மலையில், இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவி, தேனி மாவட்டத்திலிருந்து சுமார் 54 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிக்கு செல்லும் நடைபாதைகள், படிக்கட்டுகள் மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் உள்ளிட்ட பல பகுதிகள் சேதமடைந்துள்ளன. இந்த சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணியை வனத்துறையினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மேகமலை அருவிக்கு செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அருவி பகுதிக்கு முன்பாக சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணிகள் முடிவடைந்து, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதுவரை சுற்றுலாப் பயணிகள் யாரும் மேகமலை அருவி பகுதிக்கு வர வேண்டாம் என்றும் வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b