Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 17 ஜூலை (ஹி.ச.)
அரசு புறம்போக்கு நிலங்கள், பள்ளி மற்றும் கோவில் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சாதி அடையாள பலகைகள், பேனர்கள், பெயர்ப்பலகைகள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்தது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் அனுமதியின்றி சாதி அடையாள பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில அரசு தொடக்கப்பள்ளி மற்றும் விநாயகர் கோவில் அருகிலும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், எனவே அவற்றை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், நோக்கன்கோட்டை கிராமத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள சாதி அடையாள பலகைகள், பேனர்கள், பெயர்ப்பலகைகள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்றி, அதுகுறித்த நடவடிக்கை அறிக்கையை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam