Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூலை (ஹி.ச .)
தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர்.
ஆனால் முதல் படத்திலேயே சிறந்த கதை, வலுவான கதாபாத்திரம், திறமையான இயக்குநர், ரசிகர்களின் வரவேற்பு, விமர்சகர்களின் பாராட்டு என அனைத்தும் ஒருசேர கிடைப்பது மிகவும் அரிது.
அந்த அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஹபீபி’ திரைப்படத்தின் கதாநாயகன் ஈசா.
மதுரையைச் சேர்ந்த ஈசா, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயின்று வரும் மாணவர்.
அதேநேரத்தில் தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களையும் பரிசுகளையும் வென்ற விளையாட்டு வீரரும் ஆவார்.
விளையாட்டின் மூலம் பெற்ற ஒழுக்கம், விடாமுயற்சி, கட்டுப்பாடு ஆகியவற்றையே சினிமாவிலும் தனது பலமாக மாற்றிக் கொண்டுள்ளார்.
திரைப்படத் துறையில் தனது பயணத்தை தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம் பாவா இயக்கத்தில், நடிகர் அமீர் நடித்த ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதன் மூலம் தொடங்கினார்.
இத்திரைப்படத்தை குறித்து பேசிய ஈசா,
திரைப்படம் எப்படி உருவாகிறது, ஒரு காட்சியை எப்படி வடிவமைக்கிறார்கள், நடிகர்களிடமிருந்து இயக்குநர் எப்படி நடிப்பை வெளிக்கொண்டு வருகிறார் என்பதையெல்லாம் அப்போது நேரடியாகக் கற்றுக்கொண்டேன்.
அந்த அனுபவம்தான் இன்று ஒரு நடிகராக என்னைத் தயார்படுத்தியது.
அதன் பிறகு இயக்குநர் அஸ்லம் மூலம், இயக்குநர் மீரா கதிரவன் தனது ‘ஹபீபி’ திரைப்படத்திற்கான நடிகர் தேர்வை நடத்துவதாக அறிந்து ஆடிஷனில் பங்கேற்றேன்.
ஆடிஷனுக்குப் பிறகு ஆறு மாதங்கள் எந்தத் தகவலும் இல்லாத நிலையில், ரிகர்சலுக்கு அழைப்பு வந்தபோது தான் கதாநாயகனாக தேர்வாகியிருப்பது உறுதியானது.
முதல் நாளிலிருந்தே இயக்குநரின் நம்பிக்கையை எந்தக் காரணத்திற்காகவும் இழக்கக் கூடாது என்பதே என் எண்ணமாக இருந்தது.
அதற்காக ஒவ்வொரு நாளும் முழு அர்ப்பணிப்புடன் தயாராகி சென்றேன்.
நடிப்பு பயிற்சிகள், ஒர்க்ஷாப்கள் மற்றும் தொடர்ச்சியான ரிகர்சல்கள் மூலம் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொண்டு,
“நான் ஹீரோ” என்ற மனநிலையோடு அல்லாமல், கதையின் ஒரு முக்கியமான கதாபாத்திரமாகவே அணுகினேன்.
கதைக்குத் தேவையான மனிதராக இருக்க வேண்டும் என்பதைத்தான் நினைத்தேன்.
அதனால் என் நடிப்பு மிகவும் இயல்பாக வெளிப்பட்டது,
என்றார்.
‘ஹபீபி’ திரைப்படத்தில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களையும், மனநிலைகளையும் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஈசா, அதற்காக தனது உடல் எடையை கதாபாத்திரத் தேவைக்கேற்ப பலமுறை மாற்றியுள்ளார்.
முதலில் உடல் எடையைக் குறைத்து, பின்னர் சுமார் 20 கிலோ வரை அதிகரித்து, மீண்டும் குறைத்து நடித்துள்ளார்,
என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / Durai.J