Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூலை (ஹி.ச)
சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை திட்டமிடப்பட்டுள்ள 13.3 கிலோமீட்டர் நீளமுடைய நான்கு வழிச்சாலை உயர்மட்ட பாதை (Elevated Corridor) திட்டத்தின் செலவைக் குறைக்கும் நோக்கில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TNSHA) தொழில்நுட்பக் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆரம்பத்தில் சுமார் ₹2,100 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்ட இந்தத் திட்டத்தின் செலவை ₹1,500 கோடியாகக் குறைக்கும் வகையில் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
திட்டத்தின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் வழக்கமான தரநிலைகளை விட அதிகமாக இருப்பதால் கட்டுமானச் செலவு உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தூண்களின் வடிவமைப்பு, அடித்தள அமைப்பு, சாலை அகலம் மற்றும் கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அம்சங்கள் தேவைக்கு அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த தொழில்நுட்ப அம்சங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால், மொத்த திட்டச் செலவில் 25 முதல் 30 சதவீதம் வரை குறைப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக பரிந்துரைக்கப்படும் தொழில்நுட்ப மாற்றங்களை ஒப்பந்ததாரர் ஏற்றுக்கொண்டால் திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
இல்லையெனில், தற்போதைய ஒப்பந்ததாரர் திட்டத்திலிருந்து விலகும் வாய்ப்பும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ