Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள வானிலை மையம், 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என எச்சரித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை மறுதினம் வரை பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
வடக்கு கடலோர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ள வானிலை மையம், ஏனைய தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் லேசான மழை பெய்யக்கூடும் எனக் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும், கரூர், ஈரோடு, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது
சென்னையைப் பொறுத்தவரையில், இன்று நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சதம் அடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், மதியம் அல்லது மாலை நேரங்களில் வெப்பம் சார்ந்த அசவுகரியம் ஏற்படக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை முதல் வெயிலின் தாக்கம் குறையும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டை வெயில் வாட்டி வறுத்து எடுத்து வந்தது. இந்தியாவிலேயே உச்சபட்சமாக மதுரையில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P