Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 17 ஜூலை (ஹி.ச.)
விழுப்புரம் சென்னை சாலையில், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் அருகே உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே நேற்று இரவு சிங்கப்பெண் போலீஸ் படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, விழுப்புரம் பாணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த திலீப் குமார் என்பவர் மது போதையில் அங்கு பணியில் இருந்த சிங்கப்பெண் போலீஸ் படை பெண் உதவி ஆய்வாளரிடம் தரக்குறைவாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த பெண் போலீசாரை விசில் அடித்து அழைத்து கேலி செய்ததுடன், ஆபாசமாகவும் மரியாதைக்குறைவாகவும் நடந்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த சிங்கப்பெண் போலீஸ் படையினர் திலீப் குமாரை பிடித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெண் போலீசாரின் புகாரின் பேரில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் போலீஸ் படையினரிடமே இவ்வாறு தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெண்களிடம் அத்துமீறி நடக்கும் நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam