Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜூலை (ஹி.ச.)
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகதாது அணை
(Mekedatu Balancing Reservoir) திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர தி.மு.க. சார்பில் மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் தி.மு.க. குழுத் தலைவரும், கட்சியின் பொருளாளருமான டி.ஆர். பாலு எம்.பி., மக்களவைச் செயலருக்கும், மாநிலங்களவையில் தி.மு.க. குழுத் தலைவரான திருச்சி சிவா எம்.பி., மாநிலங்களவைச் செயலருக்கும் இதற்கான நோட்டீஸை அனுப்பியுள்ளனர்.
பாராளுமன்றத்தின் தற்போதைய கூட்டத் தொடரில் பிற அலுவல்களை தற்காலிகமாக ஒத்திவைத்து, மேகதாது அணை திட்டம் தொடர்பாக அவசர விவாதம் நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேகதாது சமநிலைப்படுத்தும் நீர்த்தேக்கத் திட்டம் தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள், காவிரி நீர்ப் பகிர்வில் ஏற்படும் விளைவுகள் மற்றும் இவ்விவகாரம் தொடர்பாக தீர்ப்பாயம் அமைக்க வேண்டிய அவசியம் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P