Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 18 ஜூலை (ஹி.ச.)
கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
நேற்று வினாடிக்கு 212 கன அடி அளவில் இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,044 கன அடியாக உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மாயனூர் காவிரி கதவணை 98 மதகுகளைக் கொண்டது.
இந்த கதவணையில் ஒரு டி.எம்.சி. வரை தண்ணீரை தேக்கி வைக்கும் வசதி உள்ளது. காவிரி ஆற்றின் நீரை ஒழுங்குபடுத்துவதிலும், பாசன தேவைகளை பூர்த்தி செய்வதிலும் இந்த கதவணை முக்கிய பங்கு வகித்து வருகிறது.
நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையிலும், தற்போது மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றிற்கு வினாடிக்கு 212 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் ஆகிய பாசன கால்வாய்களுக்கு இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காவிரி நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு குறித்து விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN