Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 18 ஜூலை (ஹி.ச.)
தமிழ்மின் வெட்டை அகற்றி, மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் – தமிழக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் மின் வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாநிலம் முழுவதும் நீடித்து வரும் மின் தடை மக்களின் அன்றாட வாழ்க்கை, விவசாய உற்பத்தி, தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளை பெரிதும் பாதித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மின்சாரத் துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் இந்தப் பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நிலவி வரும் மின் வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் வகையில் அண்மையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் பகுதிகளில் இலவச மின்சார வசதியும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரக்கூடிய சூழல் உருவாகும் என்பதால், சாமானிய மக்களின் வாழ்க்கை மேலும் சிரமத்திற்கு உள்ளாகும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழகத்தின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய புதிய மின் உற்பத்தித் திட்டங்களை வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்து, தமிழ்நாட்டை மீண்டும் மின் மிகை மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ