செல்போன் திருட்டு சந்தேகத்தில் இளைஞர் அடித்துக் கொலை - 3 பேர் போலீசில் சரண்
செங்கல்பட்டு, 18 ஜூலை (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் சக்தி என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பரான குணசேகரன் என்பவரின் செல்போன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அந்த செல்போனை சக்தி தான் திருடியிருப்பார் எ
செல்போன் திருட்டு சந்தேகத்தில் இளைஞர் அடித்துக் கொலை - 3 பேர் போலீசில் சரண்


செங்கல்பட்டு, 18 ஜூலை (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் சக்தி என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பரான குணசேகரன் என்பவரின் செல்போன் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

அந்த செல்போனை சக்தி தான் திருடியிருப்பார் என்ற சந்தேகம் குணசேகரனுக்கு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக குணசேகரன், தனது நண்பர்களான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அருள் மற்றும் காந்தி ஆகியோருடன் சேர்ந்து சக்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், மூவரும் சேர்ந்து சக்தியை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த சக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சக்தி உயிரிழந்ததை அடுத்து, குணசேகரன், அருள், காந்தி ஆகிய மூவரும் சேலையூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சக்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரணடைந்த மூன்று பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b