பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை, 19 ஜூலை (ஹி.ச.) சென்னை தியாகராய நகரில் சென்னையின் உயிர்நாடி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை காப்பதற்கான மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி தொடங்கி வை
Anbumani


சென்னை, 19 ஜூலை (ஹி.ச.)

சென்னை தியாகராய நகரில் சென்னையின் உயிர்நாடி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை காப்பதற்கான மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய சவுமியா அன்புமணி,

சென்னைக்கு நிலையான குடிநீர் ஆதாரம் வேண்டும் என்றால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பது அவசியம். இயற்கையாக கிடைக்கும் நல்ல குடிநீரை புறக்கணித்து கடல்நீரை குடிநீராக்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்ததாக கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் சூழல் உருவாகாமல் இருக்க பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை காக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமிக்க மிகப்பெரிய சதி நடைபெற்று வருகிறது.

எவ்வளவு பெரிய வெள்ளம் வந்தாலும் அதனை இயற்கையாக வடிகட்டும் பகுதியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் செயல்பட்டு வந்துள்ளது.

இதனை அழித்துவிட்டால் எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சென்னை நகரமே கடுமையாக பாதிக்கப்படும் என்றார்.

மேலும், பசுமை தாயகம் அமைப்பு மூலம் 2003ஆம் ஆண்டு முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

அண்மையில் சில கட்டுமான நிறுவனங்கள் மக்களைத் தூண்டிவிட்டு தவறான பிரசாரம் செய்து வருகின்றன.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கை செய்வதே இதற்கு நிரந்தரத் தீர்வாகும் என்று கூறினார்.

ஐந்து ஏக்கருக்கு மேற்பட்ட சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பாக தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு அறிவிக்கை வெளியிடும் வரை பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ