Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 19 ஜூலை (ஹி.ச.)
மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மதியம் திடீரென பேஸ்புக் சேவை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் முடங்கியது.
இதனால் பயனர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பேஸ்புக் கணக்குகளில் இருந்து தானாக வெளியேற்றப்படுதல், பதிவுகளை பதிவேற்ற முடியாத நிலை, பிழைச் செய்திகள் தோன்றுதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளை பயனர்கள் எதிர்கொண்டனர்.
இதையடுத்து, பல லட்சம் பயனர்கள் புகார் தெரிவித்த நிலையில், பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்தது.
பேஸ்புக் தகவல் மையங்களுடன் தொடர்பு கொள்வதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை பாதிக்கப்பட்டதாகவும், அதனை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தது.
மேலும், ஏற்பட்ட தடங்கலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள நிறுவனம், பயனர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளது.
மொபைல் செயலி மூலம் பேஸ்புக் பயன்படுத்தும் பயனர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், டெஸ்க்டாப் மூலம் பயன்படுத்தியவர்களே அதிக சிக்கலை சந்தித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA