Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 19 ஜூலை (ஹி.ச.)
கோவையில் ஆண் நண்பருடன் நின்றிருந்த இளம்பெண்ணை விசாரணை என்ற பெயரில் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் குற்றச் செயல்களைத் தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த 15-ஆம் தேதி துடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் வினோத்குமார் (35) மற்றும் பிற போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய 2-ஆம் கட்ட வளைவு அருகே 23 வயதுடைய இளம்பெண்ணும், அவரது ஆண் நண்பரும் நின்றிருந்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, போலீஸ்காரர் வினோத்குமார் இளம்பெண்ணை தனியாக அழைத்துச் சென்று விசாரித்ததாகவும், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவருக்கு பாலியல் ரீதியான தொல்லை அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த இளம்பெண், தனது ஆண் நண்பரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்து அழுதுள்ளார். இதையடுத்து, அந்த இளைஞர் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், வினோத்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் துடியலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பவம் நடந்தபோது வினோத்குமாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மற்ற காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P