Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜூலை (ஹி.ச.)
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று
(ஜூலை 19-ம் தேதி) நடைபெற்று வருகின்றது.
தமிழ் திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று போற்றப்படும் இயக்குனர் கே.பாக்யராஜ் தலைமையிலான 'நம்ம கே.பாக்யராஜ் அணி' சார்பில் இந்த முறை தலைவர் பதவிக்கு இயக்குனர் சேரன் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடபழனி மியூசிக் யூனியனில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுவது வழக்கம் என்ற நிலையில், இந்த தேர்தலை முன்னிட்டு சங்க உறுப்பினர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
கடந்த காலங்களில் இந்த சங்கத்தின் தேர்தலில் கே.பாக்யராஜ் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் இரண்டு அணிகள் பலமாக மோதியது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலில் கே.பாக்யராஜ் 192 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகள் பெற்று 40 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த பின்னணியில் தற்போது நடைபெற்று வரும் தேர்தலில், தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், செயலாளர் உட்பட 21 பதவிகளுக்கான போட்டி கடுமையாகியுள்ளது.
இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணியைச் சேர்ந்தவர்களுக்குள்ளேயே பணிகள் பங்கீடு மற்றும் வாக்கு சேகரிப்பு தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது சிறிது நேரத்தில் இரு அணியினருக்கு இடையிலான வாக்குவாதமாக மாறியது.
வாக்குச்சாவடிக்கு வெளியே கூடியிருந்த எழுத்தாளர்கள் சிலர் உரத்த குரலில் வாதிட்டதால், அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் உருவானது.
இதனையடுத்து மூத்த நிர்வாகிகள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி வாக்குப்பதிவை தொடரச் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Hindusthan Samachar / vidya.b