Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜூலை (ஹி.ச)
சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை அமைக்க திட்டமிடப்பட்டிருந்த ரூ.2,100 கோடி மதிப்பிலான மேம்பாலத் திட்டம், தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை வெளியாகும் வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
14.2 கிலோமீட்டர் நீளத்தில், நான்கு வழித்தடங்களுடன் கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) அமைக்கப்படவிருந்த இந்த மேம்பாலத் திட்டம், முந்தைய திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு சர்ச்சைகளைத் தொடர்ந்து, விரிவான ஆய்வு மேற்கொள்ள தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை திட்டப் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டத்திற்கான ஒப்பந்தம், டெண்டர் மதிப்பீட்டை விட அதிக தொகையில் வழங்கப்பட்டதாகவும், சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக அவசரமாக ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு திட்டச் செலவுகள் உயர்த்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த திட்டம், கலப்பு வருடாந்திர முறை (Hybrid Annuity Model) அடிப்படையில், 40 சதவீத அரசு மானியத்துடன், எட்டு ஆண்டு கால ஒப்பந்தத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதற்கும் இந்த மேம்பாலத் திட்டம் முந்தைய அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam