ரெயில்வே கோடூரில் ரூ.11,000 கோடி கிராம வளர்ச்சி திட்டம் தொடக்கம் – முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பு
ஆந்திரா , 02 ஜூலை (ஹி.ச.) திருப்பதி மாவட்டம் ரெயில்வே கோடூரில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் மிகப்பெரிய கிராமப்புற வளர்ச்சி திட்டம் தொடங்கப்பட்டது. “விகசித் பாரத் கேரண்டி ஃபார் ரோஜ்கார் ஆய்வில்யா மிஷன் (VB-G Ram Ji)” என்ற
A


ஆந்திரா , 02 ஜூலை (ஹி.ச.)

திருப்பதி மாவட்டம் ரெயில்வே கோடூரில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் மிகப்பெரிய கிராமப்புற வளர்ச்சி திட்டம் தொடங்கப்பட்டது.

“விகசித் பாரத் கேரண்டி ஃபார் ரோஜ்கார் ஆய்வில்யா மிஷன் (VB-G Ram Ji)” என்ற இந்த திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தில் மட்டும் ரூ.11,000 கோடிக்கும் அதிகமான நிதியுடன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதில் மத்திய அரசு ரூ.7,700 கோடியும், மாநில அரசு ரூ.4,000 கோடியும் வழங்குகின்றன.

கிராமப்புறங்களில் சாலைகள், வடிகால், கால்வாய் உள்ளிட்ட நிரந்தர அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்படுவதுடன், மக்களுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ டேக்கிங், பயோமெட்ரிக் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் திட்டம் முழுமையாக வெளிப்படையாக செயல்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, முந்தைய ஆட்சிக் காலத்தில் பல மத்திய திட்டங்கள் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநில நிர்வாகத்தை மீண்டும் சீரமைத்து வளர்ச்சி பணிகளை வேகமாக முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அமராவதி தலைநகர் திட்டமும், போலவரம் திட்டமும் எந்த வகையிலும் நிறுத்தப்படாது என்றும், மாநிலத்தை “ஸ்வர்ண ஆந்திரப் பிரதேசம்” என மாற்றும் இலக்குடன் அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் ராயலசீமா பகுதியை அனைத்து துறைகளிலும் முன்னேற்றும் நோக்கில் பெரிய அளவிலான தொழில் முதலீடுகள் கொண்டு வரப்பட உள்ளதாகவும், ஹார்டிகல்சர் ஹப், புதிய தொழிற்சாலைகள், டேட்டா சென்டர் உள்ளிட்ட திட்டங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

மொத்தத்தில், கிராமப்புற வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சியை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த திட்டம் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA