Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 02 ஜூலை (ஹி.ச.)
புதுச்சேரி சின்னகாலாப்பட்டு கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக கடல் கடுமையாக கொந்தளித்து வருகிறது.
இந்த கடல் சீற்றத்தால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு சேதமடைந்துள்ளன.
கடல் அலைகளின் தீவிரம் காரணமாக சின்னகாலாப்பட்டு கிராமத்தில் கடல் அரிப்பும் மோசமடைந்துள்ளது.
கரையோர மணல் பகுதிகள் பெருமளவில் அரிக்கப்பட்டு கடலுக்குள் சென்றுள்ளதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.
மேலும், மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளும் கடல் அலையால் மணலுக்குள் புதைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
படகுகள் மற்றும் வலைகள் சேதமடைந்ததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடல் சீற்றம் தொடர்ந்து நீடித்தால் மேலும் பல படகுகள் சேதமடையும் அபாயம் உள்ளதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் படகுகள் சேதம் குறித்து ஆய்வு செய்து உரிய கணக்கெடுப்புக்குப் பின்னர் நிவாரணங்கள் உடனடியாக வழங்க வேண்டும் என மீனவர் நலச்சங்கங்கள் புதுவை அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளன.
Hindusthan Samachar / vidya.b