Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 02 ஜூலை (ஹி.ச)
தமிழகத்தில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், விலையேற்றத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளதாகவும், சீரகசம்பா அரிசி கிலோ ரூ.96 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் போதிய மழை பெய்யாததால் நெல் உற்பத்தி குறைந்துள்ளதாகவும், கர்நாடகா காவிரி நீரை திறந்துவிடாததால் தமிழகத்தில் குருவை சாகுபடி பாதிக்கப்பட்டு நெல் விளைச்சல் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நெல் பற்றாக்குறை, டீசல் விலை உயர்வு மற்றும் லாரி போக்குவரத்து செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், வரும் காலங்களில் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தாதது ஏன் என்றும் ஈ.ஆர். ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மாற்றுக் கட்சி நிர்வாகிகளை தங்கள் கட்சியில் இணைப்பதில் காட்டும் அக்கறையை, ஏழை மற்றும் எளிய மக்களின் நலனிலும் அரசு காட்ட வேண்டும் என்றும், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ