Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 02 ஜூலை (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம்
குலசேகரம் அரசமூடு பகுதியில் டிப்-டாப் உடையணிந்து பேருந்தில் வந்த ஒருவர், கையில் இருந்த பையை வைத்துக்கொண்டு முதலில் செல்போனில் உயரதிகாரிகளிடம் பேசுவது போல் நடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் குட்கா பயன்படுத்திய அவர், சாலையில் சென்ற பெண்களை நோக்கி ஆபாச சைகைகள் காட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் கூச்சலிட்டனர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை சுற்றிவளைத்தனர். அப்போது அவர், தன்னைப் பற்றி உங்களுக்கு தெரியாது என்றும், முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயரைக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. அதன்பிறகும் மீண்டும் பெண்களிடம் ஆபாச சைகை காட்டியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை கயிற்றால் கட்டி தாக்கினர்.
இதுகுறித்து குலசேகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தாமதமாக வந்ததால், பொதுமக்கள் அந்த நபரின் பையை சோதனையிட்டபோது அதில் ஏராளமான குட்கா பாக்கெட்டுகள் மற்றும் விசிட்டிங் கார்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த நபர் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பதும், தற்போது களியல் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
மேலும், இதே நபர் இரண்டு வாரங்களுக்கு முன்பு குலசேகரம் டாஸ்மாக் மதுபானக் கடையில் தனது பையை அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு உள்ளே சென்றதாகவும், பின்னர் பையுடன் மோட்டார் சைக்கிள் சென்றதைத் தொடர்ந்து கடை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் பையை மீட்டுக் கொடுத்த பின்னரும், பையில் இருந்ததாகக் கூறிய பணம் தொடர்பாகவும் பிரச்சினை எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து அந்த நபரின் செயல்பாடுகள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam