Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூலை ( ஹி.ச)
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரோகன் என்பவர் தமிழக வெற்றிக் கழகத்தின் வட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இவரிடம் ஜாய் என்பவர் தனக்கு அரசியல் மட்டத்தில் செல்வாக்கு இருப்பதாகவும், ஒரு முக்கிய அரசு வாரியத்தின் தலைவர் பதவியை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
இதை நம்பிய ரோகன், பல்வேறு தவணைகளாக ரூ.20 லட்சம் வரை ஜாயிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் நீண்ட நாட்களாகியும் பதவி கிடைக்காததால் சந்தேகமடைந்த ரோகன், ஜாயிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார்.
அப்போது ஜாய் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததுடன், பின்னர் தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரோகன், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
தலைமறைவாக இருந்த ஜாய், ஹரியானா மாநிலத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்த தனிப்படையினர், ஜாயை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
கைது செய்யப்பட்ட ஜாயிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல் வேறு யாரையும் அவர் ஏமாற்றியுள்ளாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரசு பதவிகளை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b