Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜூலை (ஹி.ச.)
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சுற்றுலாத்துறை தொடர்பான உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த உயரதிகாரிகள் பங்கேற்று, மாநிலத்தில் சுற்றுலாத்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
சுற்றுலாவை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் கருதாமல், சூழல் சுற்றுலா (Eco Tourism), பண்பாட்டு சுற்றுலா, கடலோர சுற்றுலா, கலாச்சார சுற்றுலா ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் புதிய சுற்றுலா கொள்கையை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டின் முதல் கேரவன் சுற்றுலா கொள்கை (Caravan Tourism Policy) உருவாக்குவது குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.
சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாயில் 25 சதவீதத்தை அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பயன்படுத்தும் திட்டம் குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.
அதேபோல், கிராமப்புற வாழ்க்கை முறையை சுற்றுலாப் பயணிகள் நேரடியாக அனுபவிக்கும் வகையில் கிராமப்புற சுற்றுலா மையங்கள் அமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படுகிறது.
இதனுடன் ஆன்மீக சுற்றுலா, தமிழ் பண்பாட்டு சுற்றுலா, தமிழ்நாடு கடல்சார் வழித்தட சுற்றுலா, நீலகிரி மலை சாகச சுற்றுலா மற்றும் சினிமா சுற்றுலா உள்ளிட்ட புதிய சுற்றுலா திட்டங்கள் குறித்தும் ஆய்வுக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ