Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 20 ஜூலை (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையம் அருகே மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான 'மணி மெஸ்' என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது.
இந்த உணவகத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில், உணவகத்தில் சமையல் பணிக்காக ஆயத்த வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
அப்போது, எதிர்பாராத விதமாக உணவகத்தில் தீப்பற்றியது. இந்த தீ கண் இமைக்கும் நேரத்தில் உணவகத்தின் அனைத்து பகுதிக்கும் மளமளவெனப் பரவியது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த, சமையல் எரிவாயு உருளை பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீப்பிழம்புகள் அருகில் இருந்த கடைகளுக்கும் வேகமாகப் பரவின.
இதில், நாகப்பன் என்பவருக்குச் சொந்தமான டயர் பஞ்சர் மற்றும் மெக்கானிக் ஷாப், சின்னையன் மற்றும் முத்துராமன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு பெட்டிக்கடைகள் என மொத்தம் நான்கு கடைகள் தீயில் எரிந்து சாம்பலாயின. கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சாம்பலாயின.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக அதிகாலை நேரம் என்பதால் கடைகளில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து பேராவூரணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b