Enter your Email Address to subscribe to our newsletters

தர்மபுரி, 20 ஜூலை (ஹி.ச.)
தருமபுரி அருகே இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வெண்ணாம்பட்டி அடுத்த நெல்லி நகர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடற்கல்வி ஆசிரியர் இளவரசன் மற்றும் பட்டதாரி ஆசிரியர் அனுஷ்யாதேவி தம்பதியினர் ஓசூரில் பணிபுரிந்து வருவதால், அவர்களது வீடு பூட்டியிருந்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம கும்பல், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து, அதிலிருந்த ரூ.22 ஆயிரம் ரொக்கம் மற்றும் அரை சவரன் தங்க நகையை திருடிச் சென்றது.
அருகில் வசிக்கும் சுலோசனா என்பவரின் வீட்டிலும் பூட்டை உடைத்து பீரோவை சோதனை செய்த கொள்ளையர்கள், பணம் மற்றும் நகை ஏதும் இல்லாததால் எதையும் எடுத்துச் செல்லாமல் தப்பியுள்ளனர்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றும் குமார் என்பவரின் வீட்டிற்கும் புகுந்த கொள்ளையர்கள், அவரது தந்தை வீட்டில் இருந்ததை அறிந்ததும் திருடாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தருமபுரி நகர போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் வீடுகளுக்குள் நுழையும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் தொடர் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால், பொதுமக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமூடி கும்பலை தேடி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam