Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 20 ஜூலை (ஹி.ச.)
முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி. பழனிசாமி, அதிமுக தலைமையின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
மாற்றுக் கட்சிக்குச் சென்றவர்களை ஊழல்வாதிகள் என விமர்சிப்பதோடு, அவர்கள் தங்களது சொத்துகளை கட்சிக்கு எழுதிக்கொடுக்க வேண்டும் எனக் கூறப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர்களாக இருந்தவர்கள் இவ்வளவு சொத்துகளைச் சேர்த்திருந்தால், அவர்களுக்கு தலைமை வகித்தவர்கள் எவ்வளவு சொத்துகளைச் சேர்த்திருப்பார்கள் என்ற கேள்வி இயல்பாகவே மக்கள் மனதில் எழும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற கருத்துகள், அதிமுக என்பது ஊழல்வாதிகளால் வழிநடத்தப்படும் கட்சி என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தும் சூழலை உருவாக்குவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் கோஷ்டி அரசியல் உருவாகவும், எதிர் அணியினரை கட்சியை விட்டு வெளியேறச் செய்ததன் மூலம் கட்சியின் வாக்கு வங்கி பாதிக்கப்பட்டதாகவும், இதனால் அதிமுக பலவீனமடைந்ததாகவும் கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் கட்சிக்கும் அதன் சின்னத்திற்கும் வாக்களிப்பதோடு, தலைமை மீதான நம்பிக்கையும் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறிய அவர், தற்போது அந்த நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கட்சியை ஒருங்கிணைத்து, அனைவரையும் இணைத்து செயல்பட்டால்தான் அதிமுகவை மீண்டும் வலுப்படுத்த முடியும் என்றும், தோல்விகளுக்கு தலைமை பொறுப்பேற்காமல், தொண்டர்கள் மட்டுமே உழைத்து வெற்றியைப் பெற்றுத் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் கே.சி. பழனிசாமி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ