Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 ஜூலை (ஹி.ச.)
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) செயல்பாடுகள் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் உடனடி விவாதம் நடத்தக் கோரி, தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவசர ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள நோட்டீஸில்,
நாட்டின் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை நேரடியாகப் பாதித்துள்ள இந்த விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், மக்களவையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள் மற்றும் தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குளறுபடிகள் குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் எதிர்காலமும், நாட்டின் கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இந்த விவகாரத்திற்கு அவையில் முன்னுரிமை அளித்து விரிவாக விவாதிக்க வேண்டும் எனவும் மாணிக்கம் தாகூர் தனது அவசர ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P