Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 20 ஜூலை (ஹி.ச)
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இன்று அதிகாலை தனியார் ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. வாடிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, முன்னால் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து எதிர்பாராதவிதமாக வேகமாக மோதியது.
இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாடிப்பட்டி காவல்துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காயமடைந்தவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து குறித்து வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநரின் தூக்க கலக்கம் அல்லது அதிவேகம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b