Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 21 ஜூலை (ஹி.ச.)
கோவை மாவட்டத்தில் நீர்வளத் துறையின் பொள்ளாச்சி கோட்டத்தில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 22 பணிகளுக்கு டெண்டர்கள் கோரப்பட்டிருந்தன.
இந்த டெண்டர் நடைமுறைகளில் கடுமையான விதிமீறல்கள் மற்றும் சில குறிப்பிட்ட நபர்களுக்கு சாதகமாக முறைகேடுகள் நடப்பதாகத் திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி பகுதி அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றம் சாட்டியது.
இந்த டெண்டர்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மைக்காக ஓபன் டெண்டராக விடப்பட வேண்டும் என்பது அரசின் விதி.
ஆனால் அதற்கு மாறாக, குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் சாதகமாக அமையும் வகையில் லிமிடெட் டெண்டராக விடப்பட்டிருந்தது தணிக்கையில் தெரியவந்துள்ளது.
மேலும், டெண்டரில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர்கள் சான்றிதழ் பெறுவதற்காக அலுவலகத்திற்கு நேரில் வரக்கூடாது என்றும், அனைத்து நடைமுறைகளும் இணையவழியிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அரசு தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.
இந்த விதியையும் மீறி, ஒப்பந்ததாரர்களை சான்றிதழ் பெற நேரில் வர வேண்டும் என்று பொள்ளாச்சி பிரிவு அலுவலகம் நிபந்தனை விதித்திருந்தது.
இந்த இரண்டு முக்கிய விதிமீறல்கள் குறித்து அரசின் கவனத்திற்கு சென்றதை அடுத்து, அந்த 22 டெண்டர்களையும் உடனடியாக ரத்து செய்ய நீர்வளத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ரத்து செய்யப்பட்ட டெண்டர்கள் விரைவில் மீண்டும் வெளிப்படையான ஓபன் டெண்டராக அறிவிக்கப்படும் என்றும், விதிமீறலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன
Hindusthan Samachar / vidya.b