கனட நாட்டு பொருட்கள் மீது 50 சதவீத புதிய வரி - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு
வாஷிங்டன், 21 ஜூலை (ஹி.ச.) அமெரிக்க பொருட்களுக்கு எதிராக பாரபட்சமாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டி, சில கனேடிய பொருட்களுக்கு 50 சதவீத புதிய இறக்குமதி வரி விதிக்கும் உத்தரவுகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். மதுபானம், ஆட்
கனட நாட்டு  பொருட்கள் மீது 50 சதவீத புதிய வரி - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு


வாஷிங்டன், 21 ஜூலை (ஹி.ச.)

அமெரிக்க பொருட்களுக்கு எதிராக பாரபட்சமாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டி, சில கனேடிய பொருட்களுக்கு 50 சதவீத புதிய இறக்குமதி வரி விதிக்கும் உத்தரவுகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

மதுபானம், ஆட்டோமொபைல் மற்றும் பால் பொருட்கள் துறைகளில் கனடா பாரபட்சம் காட்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த புதிய வரிகள் 30 நாட்களில் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எரிசக்தி, பொட்டாஷ் மற்றும் துறை சார்ந்த வரிகளுக்கு உட்பட்ட பொருட்கள் போன்ற சில இறக்குமதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டாலும், அமெரிக்கா-மெக்சிகோ-கனடா வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் நாட்டிற்குள் நுழையும் பொருட்களுக்கு இந்த புதிய வரிகள் பொருந்தும் என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

டிரம்ப் கையெழுத்திட்ட மூன்று பிரகடனங்களின் இணைப்புகளின்படி, குளிர்சாதன பெட்டி போன்ற மின் உபகரணங்கள் முதல் இயந்திரங்கள் வரை பாதிக்கப்பட்ட கனேடிய பொருட்களில் அடங்கும்.

கடின உழைப்பாளி அமெரிக்கர்களுக்கு சுமையாகவும் பாதகமாகவும் இருக்கும் வகையில், அமெரிக்க வர்த்தகத்திற்கு எதிராக தொடர்ந்து பாரபட்சம் காட்டுவதற்கும், நியாயமற்ற மற்றும் சமமற்ற முறையில் நடத்துவதற்கும் கனடாவை பொறுப்பேற்க வைக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1930-ம் ஆண்டு வரிச் சட்டத்தின் 338-வது பிரிவை டிரம்ப் மேற்கோள் காட்டியுள்ளார். ஒரு நாடு அமெரிக்க பொருட்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுவதாக நம்பப்பட்டால், காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் 50 சதவீதம் வரை வரி விதிக்க அதிபருக்கு இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

கடந்த வாரம், கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ அமெரிக்கர்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்திற்காக தண்டிக்கும் விதமாக கனேடிய பொருட்கள் மீது அதிக வரி விதிப்பதாக டிரம்ப் மிரட்டியிருந்தார். இருப்பினும், இந்த நடவடிக்கைக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதற்கு அதிபரிடம் வேறு வழிகள் உள்ளன என்று அந்த அதிகாரி கூறினார்.

Hindusthan Samachar / vidya.b