Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 21 ஜூலை (ஹி.ச)
திமுகவின் அயல்நாடு வாழ் தமிழர் (NRI) அணி செயலாளரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் புகழ் காந்தி பி., கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு 3 பக்க ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.
1996-ஆம் ஆண்டு நாகர்கோவில் மாணவர் அணி துணைச் செயலாளராக அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், சுமார் 30 ஆண்டுகளாக திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டுள்ளார்.
2021 முதல் 2026 வரை அயல்நாடு வாழ் தமிழர் நல வாரிய உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தில், 2021–2026 காலகட்ட திமுக ஆட்சியில் நிர்வாகத் தோல்விகள் ஏற்பட்டதாகவும், அதனால் மக்கள் அதிருப்தி அதிகரித்து தேர்தல் தோல்வி ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சித் தலைமைக்கு உண்மை நிலவரங்கள் தெரிவிக்கப்படாமல், அனைத்தும் சீராக இருப்பதாக தவறான பிம்பம் உருவாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன், திமுக தனது அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகி, சிலரின் ஆதிக்கம் கொண்ட அமைப்பாக மாறிவிட்டதாகவும், வாரிசு அரசியல் மற்றும் உள்கட்சி ஜனநாயகமின்மையால் இளைஞர்கள் மற்றும் திறமையான தொண்டர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
சமூக நீதி என்ற கொள்கை, நியாயமான விமர்சனங்களைக் கூட ஒடுக்க பயன்படுத்தப்படுவதாகவும், அது பெரியாரின் சிந்தனைக்கு முரணானது என்றும் புகழ் காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரத்தில், தனிப்பட்ட முறையில் யார்மீதும் வெறுப்பு இல்லை என்றும், திமுக மீண்டும் தனது அடிப்படை கொள்கைகளுக்கு திரும்பி, தமிழ் மக்களுக்கான உண்மையான சேவையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது ராஜினாமா கடிதத்தின் இறுதியில் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ